திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
சென்னை: திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி எம்எல்ஏவுமான ஜெ. அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூச்சுத் திணறல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின்கீழ், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தனது தொகுதி மக்களுக்கு பல்வேறு நிவாரணப் பொருள்களை ஜெ.அன்பழகன் வழங்கி வந்தார். கொரோனா தொற்று சென்னையில் மிக அதிகமாக இருந்தபோதிலும், நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக, மக்களோடு மக்களாக பழகி வந்தார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1286 என்ற அளவுக்கு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதிலும், 1012 பேருடன் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது சென்னை மாவட்டம். சென்னையை பொறுத்த அளவில் பரிசோதனை செய்யப்படுவோரில் ஐந்தில் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது புள்ளி விவரங்களின் மூலம் உறுதியாக தெரிகிறது.
இந்த நிலையில், ஜூன் 3ம் தேதியான இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் என்பதால், திமுக சார்பில் செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகளுக்காக மாவட்ட நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். ஆனால், திடீரென நேற்று, அதாவது, ஜூன் 2ம் தேதி, நள்ளிரவில், திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள்