49 பேருக்கு 95 பேர் என பொய் கணக்கு 'எங்களை பட்டினி போட்டு பணம் சம்பாதிக்கின்றனர்': வேலூர் அரசு ஆதிதிராவிடர் விடுதி மாணவிகள் குமுறல்
வேலூர்: வேலூர் பில்டர்பெட் ரோட்டில் கல்லூரி மாணவிகளுக்கான அரசு ஆதிதிராவிடர் நல விடுதி உள்ளது. விடுமுறை முடிந்து நேற்றிரவு 7 மணியளவில் விடுதிக்கு திரும்பிய திருவண்ணாமலை, செங்கம் பகுதிகளை சேர்ந்த முதுகலை பட்டம் படிக்கும் 2 மாணவிகளை விடுதியில் அனுமதிக்காமல், விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவரும் விடுதி வாசலிலேயே நீண்ட நேரமாக காத்திருந்தனர். இதையறிந்த மேலும் 4 மாணவிகள் வெளியே வந்து அவர்களுக்கு பாதுகாப்புக்காக நின்றனர். இதற்கிடையில் விடுதி துப்புரவு பணியாளர், வார்டனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, மாணவிகளை உள்ளே அனுமதிக்கும்படி கூறியதாக தெரிகிறது. இதையடுத்து சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு 8.30 மணியளவில் மாணவிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், 'விடுதியில் எங்களுக்கு போதிய உணவு அளிக்கவில்லை.இதுகுறித்து கடந்த 27ம்தேதி நாங்கள் கேள்வி எழுப்பினோம். இதனால், எங்களை விரட்டுகின்றனர். இந்த விடுதியில் 49 மாணவிகள்தான் தங்கியிருக்கிறோம். ஆனால், முதுகலை பட்டம் படிக்கும் 55 மாணவிகள், இளங்கலை பட்டம் படிக்கும் 40 மாணவிகள் என மொத்தம் 95 மாணவிகள் தங்கியிருப்பதாக போலியாக கணக்கு காட்டப்படுவதாக தெரிகிறது.
அரிசியில் எலியின் கழிவுகள் இருக்கிறது. அதை நாங்களே சுத்தம் செய்கிறோம். அதேபோல், போதிய உணவு வழங்காததால் மாணவிகள் சிலர் ஓட்டலில் வாங்கி சாப்பிடுகிறோம். துப்புரவு பணியாளர் ஜெயசுதா என்பவர், மாணவிகளை விடுதி முழுவதும் தூய்மை செய்யக்கூறி கொடுமைப்படுத்துகிறார். இதற்கு விடுதி வார்டன் செண்பகவள்ளியும் உடந்தையாக இருக்கிறார். விடுதி வார்டன் சரிவர பணிக்கு வருவதில்லை. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்க உள்ளோம்' என்றனர்
கருத்துகள்